பரபரப்பான இவ்வாழ்வியல் தருணங்களில் அவசர உலகினின்று விடுபட்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாய் அமைந்தது #CTC எனும் சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் வாராந்திர முகாம்.
ஆம் கடந்தவாரம் #CTCன் வாராந்திர முகாமிற்கு தேர்வாகி ஒரு மாலை முதல் அடுத்தநாள் காலைவரை முகமறியா நண்பர்களின் சங்கமமாய் நடந்தேறியது இந்நிகழ்வு. தேர்வு செய்யப்பட்டது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் வானதி அவர்களிடமிருந்து மின்னஞ்சல் கிடைக்கப்பெற்று அவரவர் தங்கியிருக்கும் பகுதிகளைப்பொறுத்து சென்னையின் சில பகுதிகளில் ஒண்றினைந்து கிளம்புவது என்று முடிவாயிற்று.
குறித்த நாளுக்கு முன்பாகவே என்னென்ன பொருட்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் நினைவூட்டல் மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பி வைத்தார்கள் . 28 பிப்ரவரி மாலை கிளம்புவதாய் திட்டம். எனனை கிண்டி பகுதியில் மாலை 6 மணிக்கு வந்து சேர பணித்திருந்தார்கள். 5 நிமிடம் முன்பாகவே இடத்தை அடைந்திருந்தேன். மேலும் சில நண்பர்கள் வரத்தாமதம் என்பதால் அன்றைய இரவு உணவு சமைப்பதற்கு!!! ( ஆம்.. நாமே தான் சமைத்து உண்ண வேண்டும்... ) வாங்கி வந்திருந்த பொருட்களை சரிபார்த்துவிடலாம் என்றார் அவற்றை வாங்கிவந்திருந்த நண்பர் சுகன். (நெகிழிகள் இல்லாதவாறு பொருட்களை வாங்கியிருந்தார்.. இது #CTCன் கட்டாய விதிகளில் ஒன்று )
அவரோடு அவரது தெய்வமச்சான் (கமல் ஸ்டைல் ) வந்திருந்தார்.. சரிபார்த்து முடிப்பதற்குள் மற்ற நண்பர்களின் வருகையும் முடிந்துவிட பயணம் துவங்கியது... எங்கு என்பதெல்லாம் எனக்கு தெரியாது. பயணம் துவங்கி அவர்களை தொடர்ந்தவாறே நான் எனது வாகனத்தில் சென்றேன். #VIT சென்னை (வண்டலூர் அருகில் ) அடுத்த ஒருங்கிணைப்பு பகுதி இங்குதான் மற்ற பகுதிகளில் இருந்து வரும் நண்பர்கள் இணைவார்கள் என்ற தகவல் கிடைத்தது.. காத்திருப்பில் பரஸ்பர அறிமுகம் முடித்து #CTCன் பெரிய மனிதர் ராஜா வந்து அனைவரையும் அழைத்துச்சென்றார்.
அங்கிருந்து புறப்பட்ட பயணம் 45 நிமிடங்களில் ஒரு மலையடிவாரத்தை அடைந்தது. இங்குதான் முகாம் என்றார்கள்.. அச்சூழலில் மின்விளக்குகள் ஏதுமற்ற நிலையில் கையில் இருக்கும் டார்ச்களை உயிர்ப்பித்து இரவு உணவு சமைக்க ஆயத்தமானோம்.. மொத்தம் 22 நண்பர்கள் வந்திருந்தார்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையாக பிரித்துக்கொள்ள விரைவில் காய்கறி நறுக்கும் பணி.. தண்ணீர் எடுத்து வருவது போன்ற அடிப்படை வேலைகள் முடிந்தது.
சப்பாத்தி , சாதம் , உருளை வறுவல் , தக்காளி தொக்கு , ரசம் , அப்பளத்துடன் சிக்கன் கிரேவி என மெனு அசத்தலாக அமைய .. விறகு அடுப்பு மூட்டி சமைக்க ஆரம்பித்தபோது மணி பத்தை நெருங்கியிருந்தது. அடியேன் சிக்கன் சமைக்க மற்றவர்கள் அவரவர் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர்.. அடிக்கடி சிக்கன் வெந்துவிட்டதா எனக்கேட்டு சிலபல லெக் பீசுகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தது வினோத் மட்டுமே..
ஒருவழியாக கிரில் சப்பாத்தி (சூடாக) சாதம் தயாரானவுடன்.. ரசம்.. ரசம்தான்.. விசமல்ல வைக்க சீனி வந்தார்.. கமகமக்கும் புளி ரசத்துடன் கொத்தமல்லி தூவி இறக்க.. தட்டுக்களுடன் சாப்பிட நண்பர்கள் குழு தயாரானது... இவ்வேலைகள் முடியும் வரை என்கடன் பணிசெய்து கிடப்பதேவென சிலபல புகைப்படங்களை சுட்டுத்தள்ளிக்கொண்டு இருந்தார் நண்பர் ஜெகன்..
பன்னிரண்டு மணிவாக்கில் நட்சத்திரங்கள் சூழ .. நிலா ஒளிந்துகொண்டு பார்க்க இரவு உணவு உண்ண ஆரம்பித்தோம் எல்லோரும் ஒன்றாக.. உணவு முடித்தபின் ஒருவாறாக குழுமி அறிமுகப்படலம் ஆரம்பமானது.. ஒவ்வொருவரும் தங்களைப்பற்றியும் #CTCல் தங்களது பங்களிப்பு பற்றியும் சொன்னார்கள்.. மறுநாள் காலை ஒரு ட்ரெக்கிங் பற்றி கர்னல் கூறினார்.. காலை 5மணிக்கு எழுந்து ட்ரெக்கிங் செல்வது என்றை முடிவெடுத்து வானமெனும் ஒருகுடையின் கீழ் உறங்க ஆரம்பித்தோம். இயற்கையோடு ஒன்றி உறங்கி காலை எழுந்து நண்பர்கள் ட்ரெக்கிங் மற்றும் அங்குள்ள ஏரியில் குளியல் என மகழ்வோடு முடிந்தது இம்முகாம்.
0 comments:
Post a Comment